பறையர்களின் அடையாளம்-அய்யா.சி.சாமுவேல் பறையர்
____________________________________________________________
————————————————————————————-
தென்தமிழகத்தில் புரையோடிக்கிடந்த சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடி எதிர்ப்பு அரசியல் செய்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் பெரும்பாலோர் சாதி இந்துக்களின் சமரச அரசியலில் கலந்துவிட்டனர். தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பறையர்களின் உரிமைகளுக்காகப் போராடி பிராமணியத்துடனும் திராவிடத்துடனும் எவ்வித அரசியல் மற்றும் கருத்தியல் சமரசம் செய்யாத தலைவர் என்றால் அய்யா சி. சாமுவேல் பறையரைத் தவிர்த்து வேறு யாரையும் கூறமுடியாது. சாதி இழிவால் ஒடுக்கப்பட்டு பறையரினத்தின் விடுதலை மீட்பிற்க்காகவும் மானித நேயத்தினை வளர்த்தெடுக்க வாழ்நாள் முழுவதும் தொடர் புரட்சியை செய்த, அய்யா அவர்கள் உடல் நலக் குறைவால் 10.06.2014 அன்று வீரமரணம் அடைந்துவிட்டார். அய்யா அவர்கள் பயணித்து வந்த பறையர் வரலாற்று மீட்புக் களத்தில் கண்ட அனுபவங்களையும், அய்யாவின் பறையர் விடுதலைக்கான போராட்ட அணுகுமுறையையும் பறையராகப் பிறந்த நாம் அனைவரும் அறிய வேண்டும்.
இளமைப் பருவம்
இளமைப் பருவங்களில் இளைஞர்கள் காதல், விளையாட்டு, பொழுதுபோக்கு என்று சிந்திப்பது தான் இன்றைய சமூக எதார்த்தம். இது சாதாரன மனிதனின் சிந்தனையோட்டம். ஆனால் சாதாரன மனிதனாக சிந்திக்காமல் அய்யா.சி .சாமுவேல் பறையர் அவர்கள் தனது பள்ளிப் பருவம் முதற்கொண்டே சமூகம் சார்ந்த சிந்தனைகளை யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். இவரின் ஆளுமை சிறுவயதிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் ‘இளையராஜா நற்பணி மன்றம்’ என்ற ஒரு இளைஞர் குழுவை ஒருங்கிணைத்தார். இதில் இடம் பெற்றவர்கள் அனைவரும் பறையரின மக்கள். இதனைக் ‘கல்கோட்டை நண்பர்கள்’ எனவும் அழைப்பார்கள். இந்த நற்பணி மன்றம் சார்பாக முதலில் திரைப்படப் பாடல்களை சமூகம் சார்ந்த கருத்துக்களோடு மெட்டமைப்பதுதான். நாளடைவில் இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுக் கருத்துக்களை பரப்புவது என்றளவில் விரிவடைந்தது. இளையராஜா நற்பணிமன்றம் 1983-இல் பட்டியலின இளைஞர் இயக்கமாக (DYM) பரிணமித்தது. இளையராஜா நற்பணி மன்றம் மூலமாக எடுத்துக்கொண்ட கலைப் பயிற்சியானது பட்டியலின இளைஞர் இயக்கத்தினை பல்வேறு கிராமங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. தலித் இளைஞர் இயக்கம் சார்பாக கல்வியே பறையர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்ற கருத்தினை மையப்படுத்தி பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு கலைப் பிரச்சாரத்தினை முன்னெடுத்தார். இதன் வளர்ச்சி அடுத்தகட்டமாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அனைத்துக் கிராமங்களிலும் தலித் இளைஞர் இயக்கம் சார்பில் மாலை நேரக் கல்வி மையத்தினை உருவாக்கி ஜனநாயகத்திற்கான சமூக விழிப்புணர்வுக் கல்வியை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து இலவச சேவை செய்தனர். கல்விப் பணிகளை மையப்படுத்தி சேவைகள் செய்ததால் இந்த இயக்கத்திற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. கிராமங்களில் கல்விப்பணியோடு சமூகம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளையும் நாளடைவில் கையிலெடுக்க ஆரம்பித்தது. மேலும் இதன் மூலம் ஆண்டு தோறும் பறையரினத் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்தி சமூகத் தலைவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த முறையில்தான் அறிவர் அம்பேத்கர் அவர்களின் புகழ் தென்தமிழகம் முழுவதும் பரவியது.
தெந்தமிழகத்தில் அறிவர் அம்பேத்கர் அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பெருமையும் புகழும் அய்யா சி. சாமுவேல் பறையர் அவர்களுக்கு முதலிடம் உண்டு. தலித் இளைஞர் இயக்கம் சார்பாக மாநில அளவிலான விழிப்புணர்வு கலை விழாக்களையும் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் முன்னெடுக்குமளவிற்கு இயக்கம் பரிணமித்து விரிவடைந்தது. இது 1990 வரையிலும் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. தலித் இளைஞர் இயக்கத்தில் பறையர், பள்ளர், அருந்ததியர்கள் என அனைத்து சமுதாய மக்களும் செயல்பட்டு வந்தனர். இயக்கம் வளர வளர அய்யாவின் அறிவுத் தேடல் மிகவும் அதிகமாயிற்று. இதன் தொடர்ச்சியாக பறையர்கள் குறித்த ஆழ்ந்த ஆய்வுக்கு செல்லும் போது பறையர்களுக்கு நீண்ட நெடிய வரலாறுகள் மறைக்கப் பட்டுள்ளதினை அறிந்து கொள்கிறார்.
இத்தகைய மேன்மை பொருந்திய வரலாற்றினை ஏன் நமது அரசியல் இயக்கங்களும் சமூக இயக்கங்களும் முன்னெடுக்கவில்லை என்ற அறிவுத் தேடலோடு இதனை எப்படியாவதும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும், அதற்கான பொறுப்புணர்வும் கடமையுணர்வும் நமக்கு இருக்கிறது என்றும் தீர யோசித்து மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1891-இல் தொடங்கிய பறையர் மகா ஜன சங்கத்தினை புதுப்பித்து இந்த இயக்கத்திற்கு நூற்றாண்டு விழாவினையும் முன்னெடுத்து, சங்கத்தினை ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ என்று பெயர் மாற்றம் செய்து 1991-இல் மாவீரனின் நினைவாக ஆரம்பித்தார். 1991-இல் ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ அமைப்பை ஆரம்பிக்கும்போது ஏன் தமிழ்நாடு பறையர் பேரவை உருவாகிறது இதற்கான தேவை என்ன நியாயத்தினையும் விளக்கத்தினையும் 1991-ஆம் ஆண்டு வெளியான துண்டறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.
தமிழ்நாடு பறையர் பேரவை ஏன்?
பட்டியலின ஒற்றுமை, தலித் ஒற்றுமை (சக்கிலியர், பறையர், பள்ளர் ஒற்றுமை) என்பது சில நெருக்கடிகளின், தேவைகளின் அடிப்படையில் மேடையில் பேசுவதற்கும் காகிதத்தில் எழுதுவதற்கும் மட்டுமே தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கட்சி/இயக்க தலைமையில் இருக்கும் அனைத்து தலித் இயக்கவாதிகளின் செயல்பாடுகளும் தத்தமது சாதிய வன்மத்துடனே செயல்படுவதனை நம்மால் உணரமுடிகிறது. குறிப்பாக பறையராக இருந்தால், பள்ளர்களையும், அருந்ததியர்களையும் எவ்வாறு மேலே வரவிடாமல் தடுப்பது, பள்ளர்களாக இருந்தால் பறையர்களையும், அருந்ததியர்களையும் எவ்வாறு மேலே வரவிடாமல் தடுப்பது, என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்வது. ஒரு சில தலைவர்களால் ஒட்டுமொத்த தலித் அரசியலையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று நியாயம் சொல்லுவார்கள் இந்த அறிவு ஜீவிகள். ஆனால் உண்மையில் பெருமளவிளான தலித் அரசியல்வாதிகள் சாதிய மனப்பான்மையோடு தான் செயல்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், பண்பாட்டு ரீதியாக(திருமன உறவு) பட்டியல் சாதிகளுக்குள் ஒரு இனக்கத்தினை ஏற்படுத்துவதற்க்கு தலைவர்கள் முன்வரவில்லை. எனவே, உணர்வுப்பூர்வமாக உருவாகாத ஒற்றுமை என்பது சமூகத்தினை கூறுபோட்டு விடும்.
நாம் வாழும் சமூகம், சாதிகளால் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சாதியின் தாக்கத்திற்கு நாம் உள்ளாகியே வேண்டியதிருக்கிறது. எனவே “சாதிவாரியாக அமைந்துவிட்ட இச்சமூக அமைப்பில் சாதிவாரியான அமைப்பாவதும், பொதுவான தேவைகளுக்கு தோழமைகளோடு களத்தில் நிற்பது” என்பதுமே இந்த மண்ணுக்கேற்ற மனவியல் மருத்துவம் என்று உணர்கிறோம்.
‘நாம்’ நமது வீட்டைக் கட்டுவோம்….!
‘அவர்கள்’ அவர்களின் வீட்டைக் கட்டட்டும்….!
பொதுவான செயல்களுக்கு ஒன்று கூடுவோம்.
எனவே இந்த அடிப்படையில் நாங்கள் பறையர்களாக இருப்பதாலும் தமிழகத்தில் வாழும் பட்டியலினத்தில் பறையர்களே பெரும்பான்மையாக இருப்பதாலும் இவர்களை அமைப்பாக்கிட ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ என்ற அமைப்பை தற்காலிகமாக அமைத்து வருகிறோம்.
சாதியின் பெயரால் இப்படி அமைப்பாவதும் வெளிப்படையாக வெளியில் வருவதும்
சாதியால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும்
காலத்தின் கட்டாயமாய் இருக்கிறது….!
காலத்தின் தேவையாய் இருக்கிறது….!
காலத்தின் நெருக்கடியாக இருக்கிறது….!
எனவே,
மறைந்து மறைந்து வாழ்ந்தது போதும்!
சாதியை மறைத்து மறைத்து மடிந்தது போதும்….!
வெட்கி வெட்கி தலை குனிந்தது போதும்…!
வேதனைப்பட்டுப்பட்டு வீழ்ந்தது போதும்…!
கள்ளரைப் போல், மறவரைப் போல் மீசையை முறுக்கி
பறையர் என்போம், ‘ஆம்’ பறையர்தான் என்போம்.
பறையர்தான் என்று முழங்குவதால்
ஆழ்மனதில் புதைந்து கிடக்கும்
தாழ்வு எண்ணத்தை தகர்த்தெறிவோம்….!
‘அரிசன்’ என்பது அன்றையப் பொய்யடா
‘தலித்’ என்பது இன்றையப் பொய்யடா
‘பறையர்’ என்பது எனக்கு மட்டும் உள்ள தனிப்பெயர்.
‘தலித்’ என்பது எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் உள்ள பொதுப்பெயர்.
‘பறையர்’ என்பது நான் உடுத்தியிருக்கும் வேட்டியைப்போல!
‘தலித்’ என்பது நான் போர்த்தியிருக்கும் துண்டைப்போல !
துண்டு எனக்குத் தேவைதான்
துண்டைவிட உடுத்தியிருக்கும் வேட்டியே எனக்கு முதல் தேவை.
எனவே
பறையர் என்று சொல்லடா….பாரில் நிமிர்ந்து நில்லடா…!
உனக்கு நிகர் எவரடா….உலகிற்கு இதைச் சொல்லடா..
என்ற பறை முழக்கத்தை உயிர் மூச்சாய் கொண்டு
பறையர், பறையர் என்று பறை முரசடித்து…
சாதி இழிவின் பகை முடிப்போம்.
எந்த சாதியைச் சொல்லி அடக்கப்பட்டோமோ
அந்தச் சாதியைச் சொல்லியே ஆர்த்தெழுவோம்..!
எந்தச் சாதியைச் சொன்னாலே தாழ்வாய் கருதி தலைகுனிந்தோமோ
அந்தச் சாதியை ஆயிரம் முறை அழுத்தம் திருத்தமாய் கூறி
தாழ்வு எண்ணத்தைத் தகர்த்து எறிவோம்
எந்த (சாதி) கல் நம்மை முடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் நம்மீது எறியப்பட்டதோ
அந்த (சாதி) கல்லையே நாம் நிமிர்வதற்கும், நிற்பதற்கும்
தாங்கியாகவும், தளமாகவும் ஆக்கிக்கொள்வோம்…!
எனவே
புளுங்கியது போதும், எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்க
புலி என செயல் செய்ய புறப்படுவோம் வெளியில்….!
அம்பேத்கர் ஒரு அறிவுச் சூரியன்….!
அந்த அறிவுச் சூரியனை அடையாளம் காட்டிட ஒளிவிளக்குகள் தேவையில்லை அம்பேத்கரைத் தூக்கிப் பிடித்திட ஆயிரம் இயக்கங்கள் இருக்கின்றன.
ஆனால்…! தமிழக மண்ணில் பறையனாய் தோன்றி பறையனாய் வாழ்ந்து இன எழுச்சிக்கு வித்திட்ட அம்பேத்கருக்கு வழிகாட்டியாக விளங்கிட்ட பறையர்களின் மாவீரன் இன்றல்ல நேற்றல்ல 100 ஆண்டுகளுக்கு முன்பே ‘பறையன்’ என்றாலே இழிவின் எல்லையாய் கருதப்பட்ட காலகட்டத்தில் ‘பறையர் மகாஜன சபையை’ 1891-இல் நிறுவிய சமூகப் போராளி. ‘பறையன்’ என்ற வார இதழை 1893-இல் தொடங்கி ஏழு ஆண்டுகள் நடத்தி பெருமை பெற்றவர். வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு மாமன்னரிடம் தன்னை ‘பறையன்’ என்று அறிமுகம் செய்துகொண்ட மானமிக்க மனிதர். பொதுப்பாதைகளில் நடக்கவும், பொதுக்குளங்களில் நீர் எடுக்கவும் 1925-இல் முதல் உரிமையை வாங்கிக் கொடுத்த முதல் மாமனிதர். இத்தனையும் செய்துவிட்ட இனமான எங்கள் அய்யா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?. பறையர் இனத்தில் தோன்றிய தமிழ் வித்தகர், ‘தமிழன்’ என்ற இதழை 1907-இல் நடத்தி பெருமை பெற்ற அயோத்திதாசப் பண்டிதரை யார் அறிவார்? பறையர் இனத்தில் தோன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் இன எழுச்சிக்கு வித்திட்ட தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள், ஆரிய சம்காரன், எம்.சி. ராசா, அரசியலில் நேர்மையும் பொதுவாழ்வில் தூய்மையும் கொண்ட ஆனால் அழுக்கேறிய அரசியல் கட்சிகளால் ஆழப்புதைக்கப்பட்டு வரும் அய்யா கக்கன் அவர்கள், இது போன்ற மாபெரும் நம்மினத் தலைவர்களை மறந்துவிட்டோம். அடையாளம் காட்டிட அயர்ந்து விட்டோம். எங்கள் இனத்தவர் எவருக்கும் சளைத்தவர் அல்ல என்று இவர்களைத் தூக்கிப் பிடித்து இன எழுச்சிக்கு வித்திடுவோம்.
அறிவர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்கு பின்பு புற்றீசல் போல் முளைக்கத் துவங்கிய நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் அறிவர் அம்பேத்கரை கடவுளாகவும், தெய்வமாகவும், சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அறிவர் அம்பேத்கர் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்விக்கான கருத்தியலையும் உரிமைகளையும் முன்னெடுக்கத் தவறிவிட்டனர். இதன் விளைவு ஒட்டுமொத்த பறையரினத்தையும் ஆதிக்கச்சாதி இந்துக்களிடமும், பிராமணியத்திடமும் அரசியல் பங்கேற்பு என்ற சமரச உடன்பாட்டின் மூலம் சரணடைய வைத்துவிட்டனர். இவ்வாறு சுயநலம் சார்ந்து எந்தவித கொள்கையும் நோக்கமும் இல்லாமல் அண்ணலை வியாபாரப் பொருளாகப் பார்க்கப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாடு பறையர் பேரவை என்ற சமூக அமைப்பை ஆரம்பிப்பதன் நோக்கத்தினை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்து இதன் எல்லைகளையும் நோக்கத்தினையும் விளக்கியிருக்கிறா அய்யா சி.சாமுவேல் பறையர். இந்த நோக்கத்தினை மையப்படுத்தி தென்தமிழகத்து பறையர் இளைஞர்களை ஒருங்கிணைத்து பறையர் மக்களின் வாழ்வாதாரங் களுக்காகப் பேராடி வந்தார்.
பறையரின மக்கள் மீது வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகளில், நேரடியாகக் களம் புகுந்து பதில் தாக்குதலில் ஈடுபடும் போக்கை பறையர் இளைஞர்கள் மத்தியில் வளர்த்தார். அதன் மூலம், 1990-களில் பெருவீச்சாய் புறப்பட்ட பறையர் அரசியலுக்கு இயக்க ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தொடக்கத்தை அளித்தவர் சாமுவேல் பறையர் என்றுதான் சொல்லவேண்டும். 1990களின் தொடக்கத்தில் தென்தமிழகப் பகுதிகளில் பறையர் சமூக மக்களின் தன்மான, சமூக, அரசியல் விழிப்புணர்விற்கு ஆழமாக அடித்தளத்தை கட்டமைத்தவர் சாமுவேல் பறையர். கிராமம் கிராமமாக திண்ணைகளில் அமர்ந்து இளைஞர் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். மதுரை மாநகரத்தில் கையால் மலம் அள்ளிச் சுமந்த பறையர் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சாமுவேல் பறையர் ஆற்றிய மிகத்தீவிரமான களப்பணிகளால், அம்மக்கள் மதிப்பிற்குரிய மாற்றுத்தொழில்களுக்கு மாறினர். அதனால் அவர்களுக்கு எற்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதில்தரும் பாதுகாப்பு அரணாக நின்றார். அதனால், மதுரை நகரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கினார்.
பறையர்களை அரசியல் சக்தியாகத் திரட்டும் நோக்கில் 1991-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பறையர் பேரவையின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் பறையர்கள் குறித்த வரலாற்று அறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இளையபெருமாள், வை. பாலசுந்தரம் போன்றோரின் கட்சிச்சார்பு அரசியலுக்கு எதிராக சாமுவேல் பறையர் நடத்திய பரப்புரைகள், தனித்த அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெருமளவிலான பறையர் இளைஞர்களிடையே ஏற்படுத்தியது. அதன் விளைவாகத், தென்தமிழகத்தில் பறையர் குடியிருப்புகள் முழுவதிலும் தமிழ்நாடு பறையர் பேரவையின் கொடிகள் பறந்தன. பேரவையின் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டன. வீடு வீடாக பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. சேரிகள் தோறும் அம்பேத்கரின் சிலைகள் நிறுவப்பட்டன. விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் எப்படிப்பட்ட தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் மனத்துணிவை பறையர் சமூக மக்களிடையே உருவாக்கி, அம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர் அய்யா.சி. சாமுவேல் பறையர்.
1990களில் பறையர்கள் பல்வேறு கட்சிகளில் இயங்கி பல்வேறு கருத்தியலோடு பயணித்து வந்தனர். இவர்களுக்கு எது சரியான கருத்தியல் எதனைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலே பயணித்து வந்தனர். இது போன்ற சிக்கலைத் தீர்க்கவே மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893-இல் தொடங்கிய ‘பறையன்’ இதழை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், பறையர்களுக்கான கருத்தியல் பரப்புகின்ற தனி ஏடு வரவேண்டும் என்ற உயரிய நோக்கில் ‘பறையர் குரல்’ இதழை ‘பறையன்’ இதழ் நூற்றாண்டு விழாவின் (1993) போது வெளியிட்டார். முதல் இதழானது 12-04-1993 அன்று தேவநேயப் பாவணார் நூலகக் கட்டிடத்தில் முனைவர்.வி. பலராமன் (தொழிலாளர் நல இணை ஆணையர்) அவர்கள் தலைமையில் வெளியீட்டு விழா நடந்துள்ளது. முதல் இதழை மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கொள்ளுப்பேத்தியான முனைவர். நிர்மலா அருள்பிரகாசம் வெளியிட செல்வி.மு. சங்கமித்திரை பெற்றிருக்கிறார்.